ஆத்திரம் பொங்கி வருகிறது.
ஜெயமோகனுக்கு ஒரு பதில்பதிவு எல்லாம் எழுதுவேன் என்று நான் நினைத்ததே இல்லை. முழுவதும் படிக்க முடிந்தால்தானே பதில்/ விமர்சனம் எழுதுவது! ஆனால் நித்யானந்தாவின் இன்றைய நிலைமை குறித்து வந்த பதிவைப் படிக்கச்சொல்லி சில நண்பர்கள் வற்புறுத்தியதால் மெதுவாகக் கஷ்டப்பட்டுப் படித்தேன்.
அதில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து என் எண்ணங்கள்-
நித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அம்பலப்பட்டது ஒரு தனிமனிதன் என்றால் ‘இந்து மனங்கள்’ எந்தச் சிக்கலுக்காக முண்டியடித்து அவன் படத்தைப் போட்டுக் கொளுத்துகின்றன? அவன் முன்வைத்த தத்துவம் என்னவென்று தெரியாது, என்னையே துன்புறுத்திக்கொண்டு இம்மாதிரி எழுத்துக்களை நான் படிப்பதில்லை. இந்தக் கட்டுரையே போதும் இதற்கு மேல் நித்யா பெயரில் எவனோ எழுதியதெல்லாம் தத்துவம் என்று படிக்கும் பொறுமை எனக்கு இல்லை.
அறச்சிக்கல் என்றால் என்ன? இதே கட்டுரையில் பின்னர் வரும் தர்மம் சம்பந்தப்பட்ட விஷயமா? நீதிக்கும் நியதிக்கும் இடைபுகுந்து தப்பிக்கத்தெரியாத நிலைதான் அறச்சிக்கலா? அறம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவா? இல்லை இந்து அறம் முஸ்லிம் அறம் என்றெல்லாம் இருக்கிறதா?
இவனது கேவலம் என்று எல்லாரும் கொதிப்படைவது அவனது காம இச்சையை அவன் பூர்த்தி செய்துகொண்டதற்கா இல்லை அந்த பிம்பம் தகர்க்கப்படுகிறதே என்றா? எல்லா சாமியார்களையும் சகித்துக்கொள்ளாதவர்களுக்கும் இன்று இந்துமுகத்தில் இன்னுமொருமுறை கரிபூசப்பட்டதே என்று கலங்குபவர்களுக்கும் ஒரே அறப்பார்வைதானா?
நான் இந்து, நான் இப்படித்தான் எனும் ஆணவத்தின் அடக்கி வாசிக்கும் மொழியா?
இல்லை இந்து சாமியார் இப்படித்தானே செய்வான் இதற்கென்ன இவ்வளவு கொதிப்பு என்ற அசட்டையான மனநிலையா? திமிரா? இதற்கெல்லாம் அறம் வெங்காயம் என்று சொல்பவர்கள் முட்டாள்கள் எனும் ஏளனமா?
ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை.
இவ்வளவுதானா? சில அற்பர்கள் வெளிப்படையாகக் காசுக்குக் குரைத்தார்கள், வேறு சில அற்பர்கள் இன்னும் மிகுந்த தொலைநோக்கோடு பரந்த இந்து சாம்ராஜ்யக் குறிப்புணர்ந்து சால்ஜாப்பு சொல்கிறார்கள். இருவருக்குமே இதே ஊடக உதவிதானே. ஊடகங்கள் இல்லாவிட்டால் ராமபாலம் கதையை நாஸாவின் ஆதாரம் என்றெல்லாம் பொய் சொல்லி விற்க முடியுமா?
இவன் அவமானப்பட்டான் என்றால் இவன் இந்துப் பிரதிநிதி இல்லை, ஊடக மாயை! அவனுக்கும் இந்துமத முகமூடி இருந்ததால்தானே இப்போது எல்லா சேனைகளும் துள்ளி வருகின்றன? எங்கள் வீட்டுத் திருடனை ஊரெல்லாம் சேர்ந்து அடிக்க வேண்டாம் நாங்களே கண்டிக்கிறோம் எனும் மனப்பான்மைதானே!
இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை,சிறுமைப்படுத்துவதாக அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது.திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று.
திட்டமிட்டு யாரும் துறவிகளைச் சீண்டுவதில்லை. துறவி என்ற பெயரில் இவர்கள் செய்யும் திருட்டுத்தனத்திற்குத் தான் எதிர்ப்பு. அவ்வளவு அற்புதமான ‘மரபு’இவ்வளவு எளிதாகச் சிறுமைப்படுத்தப்பட்டால், அதன் வீச்சும் வீரியமும் எவ்வளவு?
இந்து மரபில் மூன்று கூறுகள் உள்ளன என்று சொல்லலாம். ஒன்று,தத்துவார்த்தமான தளம். இரண்டு , வழிபாடு,பக்தி சார்ந்த தளம். மூன்று, பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த தளம். ……நம் சூழலில் பிந்தைய இரண்டும்தான் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. அவை அறிவார்ந்த தேடல் கொண்ட ஒருவருக்கு முழுநிறைவை அளிப்பதில்லை.
அறிவார்ந்த தேடலுக்கு எவை உதவுகின்றன? வேதங்களா உபநிஷத்துக்களா?இடைச்செருகல்கள் நிறைந்த கீதையா? அறிவார்ந்த தேடலுக்காக நித்யா போன்றவனெல்லாம் கிட்டத்தட்ட கடவுளாக மாறும் கூட்டம் எப்போதாவது அறிவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறதா?
அறிவுள்ளவன் எவனாவது இந்துமதத்தின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதீயக் கேவலத்தைச் சகித்துக்கொண்டிருப்பானா? அப்படிப்பட்ட அநாகரிகத்துடன் ஒத்துப்போகும் போது அறிவு என்பது எது? சந்தர்ப்பவாதமா? சட்டத்திற்குப் பயந்து உள்ளேயே புகைந்து கொண்டிருக்கும் ஆதிக்க ஆணவமா?
இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதைச் செய்தவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்
இங்கே தான் குயுக்தி வெளிப்படுகிறது. விவேகானந்தர் இந்து கோட்பாடுகளை முன்வைத்து, உபநிஷத் சாரத்துடன் அத்வைத மார்க்கத்தைப் பரப்பியதைப் போல்,ஜெ.கிருஷ்ணமூர்த்தி செய்யவில்லை. ஜேகே, ஓஷோ இருவருமே மத அடையாளங்களைத் தவிர்த்தவர்கள். அவர்களின் அறிவுத்திறன் இவர்களுக்குத் தேவைப்படுவதால்தான் ஜேகே கூட இந்துதத்துவ மரபின் உரையாடல்களை முன்வைத்ததாக இப்படி ஒரு பொய். அடுத்து புத்தர்கூட இந்துமதத்தைத்தான் முன்வைத்தார் என்று சொல்வார்கள்.
அதாவது ஒரு தேவை சமூகத்தில் உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றி தங்களை நிறுவிக்கொள்கிறார்கள் இவர்கள். பெரும் அமைப்புகளை உருவாக்குகையில் அமைப்புகளுக்குரிய அத்தனை சிக்கல்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது.
மதம் என்பது ஒரு மார்க்கமாக வாழ்முறையாகத்தான் சொல்லிக்கொண்டார்கள்,இப்போது அது நிறுவனம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு பெரிய மதமே இருக்கும் போது அங்கே எதற்கு துணை நிறுவனங்கள்? இவ்வளவு தத்துவ பாரம்பரியமிக்க மதவழி வருபவர்களுக்கு ஒரு நிறுவனத்தை நேர்மையுடன் செயல் படுத்தத் தெரியாதா?
பூஜ்யம் கண்டுபிடித்த மதம் என்று சொல்லிக்கொள்வது எல்லாம் கணக்கைத் தப்பாக எழுதி ஏமாற்றத்தானா?
நித்யானந்தர் மாட்டிக்கொண்டது சமீப காலமாக நடந்துவரும் ஊடகப்படையெடுப்பின் ஒரு விளைவு….. இன்று இழிவுபட்டு நிற்பது நித்யானந்தர் என்ற மனிதரே ஒழிய எந்த மரபின் தோற்றத்தை அவர் தன் வேஷமாகக் கொண்டாரோ அந்த தோற்றம் அல்ல…
ஒரு கம்யூனிஸ்டின் கதை எழுதுவதாக ஆரம்பித்து மொத்த கம்யூனிச சித்தாந்தத்தையே இழிவு படுத்தும் போது பானையின் ஒரு பருக்கையே உதாரணம்,மாட்டிக்கொண்டால் ஒரு பருக்கை பானையாகாது எனும் மொழிவிளையாட்டு!
ஆனால் காலம்தோறும் எந்த மோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும் காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
எந்த மோசடியாளனும் எந்த உடையை வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் அந்த உடை அணிந்தவன் நம்ம ஆளு என்று குலாவுவதும், அவன் மாட்டிக்கொண்டால் ஜாதியைப் பொறுத்து அது குற்றமா இல்லை சறுக்கலா என்றெல்லாம் பேசும் அயோக்கியத்தனத்திற்கும் இந்த வர்ணத்திற்கும் ஏன் இவ்வளவு நெருங்கிய தொடர்பு?
அப்படி என்ன தனித்துவம் இதில்? இந்த ஆடையின் ஆரம்பம் என்ன? அன்றைய சூழலில் அவசியம் கருதி உருவான நிறத்துக்கு இன்று பட்டில் அதே நிறத்தில் நடிக்கப் புறப்படும் போலிகளுக்கும் என்ன தொடர்பு? காவிக்கு அன்றிருந்த அர்த்தம்தான் இன்னும் இருக்கிறதா?
காவி என்பது ஒரு குறியீடு என்றால் இன்று அது எதைக் குறிக்கிறது?
வழித்துணையாக ஆவது தங்கள் பாதையில் தாங்களே சென்றவர்களின் சொற்கள் மட்டுமே. ஆகவே ஒருகணமும் சிதையாத கவனம் அதற்கு தேவையாகிறது. அதைத்தான் உபநிடதம் சொல்கிறது ‘ஜாக்ரதை!’………
ஜாக்ரதா என்பது விழிப்புணர்வு!
எவனுக்கெல்லாம் கூச்சமில்லையோ, குற்ற உணர்வு இல்லையோ அவனெல்லாம் தன் பாதையில் தானே நடந்து சென்றதாகத்தான் சொல்கிறான். அவன் மாட்டிக்கொள்ளாதவரை ஞானி, மாட்டிக் கொண்டால் ஏமாற்றுப் பேர்வழி!
ஜாக்ரதா என்று குறிப்பிடப்படும் விழிப்புணர்வு எச்சரிக்கை உணர்வு அல்ல; அது அறிவின் கூர்மை நிதானத்துடன் வெளிப்படும் மனநிலை.
விழிப்புடன் இருப்பது மாட்டிக் கொள்ளாமல் இருக்கத்தான் என்று நினைத்தேன்,இவர்கள்தான் இனி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்று காட்டுகிறார்கள்.
நம்மை நாமேதான் பெரும்பாலும் ஏமாற்றிக்கொள்கிறோம்...இத்தகைய தருணங்களில் நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. எது இந்து ஞான மரபின் சாரமோ அதை முன்வைப்பதே சரியான வழியாக இருக்க முடியும். எது உண்மையோ அதுமுன்வைக்கப்படவேண்டும். அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும் வல்லமை இருக்கும். போலிகளை, மோசடிகளைச் சார்ந்து உண்மை நிலைகொள்ள முடியாது. அது அவர்களை பிளந்துகொண்டுதான் தன் வழியைக் கண்டுபிடிக்கும்.
இல்லாத ஒன்றை எவ்வளவு வாய் கிழியக் கத்தினாலும் அது நிலைக்காது.
இந்து மத ஞானம் என்பது எந்தக்காலத்திலிருந்து? இந்து என்று இஸ்லாமியர்கள் பெயர் வைத்தார்களே அன்றிலிருந்தா?
இந்திய ஞானி வேறு இந்து ஞானி வேறு.
தொன்மையான இந்நாட்டு ஞான மார்க்கம் கேள்விகளை உள்ளடக்கியது. கேள்விகள் நெருடலானபோதுதான் பதில் தர முடியாத வர்க்கம் பாமரர்களிடமிருந்து பலவற்றை மறைத்து வைத்தது. தெளிவை நோக்கியது இந்திய ஞானம், திருட்டுத்தனத்தை உருவாக்கியது இந்து ஞானம். இந்தத் திருட்டுத்தனம், தானே பிளந்து கொண்டு அழியும்.
நித்யானந்த சாமியாரின் மீது எனக்கு எப்போதும் மரியாதையோ நம்பிக்கையோ இருந்தததில்லை. எல்லா அயோக்கியர்களிடமும் இருந்த கோபம்தான் அவன் மீதும். அந்தப் பெண்ணுடன் சுகமாகக் கிடந்த படம்கூட எனக்குக் கோபம் வரவழைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்திற்காக ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது.