Thursday, March 4, 2010

நித்யானந்தாவை நன்றாக பாருங்கள்!

nithyananda

நித்யானந்தா தயாராக இருந்தான். ஹரித்துவாரில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளாவுக்கான புனித பயணத்தை பக்தகோடிகள் புடைசூழ, இந்த மார்ச் 4ம்தேதி தலைமை தாங்கிச் செல்ல வேண்டும் அவன். ஒன்பது கோடி பேர் வருவார்கள் என பீற்றிக்கொள்ளும் அந்த வைபவத்தில், செய்த பாவங்களையெல்லாம் கங்கையில் கழுவி எழுந்திருக்க முடியும். அதற்குள் அந்தப் பாவங்களில் கொஞ்சத்தை சன் டி.வி பிட்டு பிட்டுக் காண்பித்துவிட்டது.

எவ்வளவு பரபரப்பும், ஆர்வமும் நம் மக்களுக்கு. நடக்கவே நடக்காத விபரீதம் போல, ‘குமுதத்தில் எழுதிய அவரா இவர்’ என்பது போல பார்த்தாலும், அந்தக் காட்சி குறித்த ரகசிய ஆர்வம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்க்காதவர்கள் பாவம் செய்தவர்களைப் போல துடித்துத்தான் போனார்கள். இந்த இயல்புகள் தெரிந்துதானே சன் டி.வி அறுவடை செய்கிறது. தங்கள் வியாபார ரீதியான வெற்றிகளுக்கு, முதலாளிகள் தாங்கள் கட்டியமைத்த புனிதங்களையும் போட்டு உடைப்பார்கள். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியத்தை செய்வார்கள்.

இந்துத்துவா சக்திகளுக்கு அடிவயிறு பற்றிக்கொண்டது. சில இடங்களில் நித்யானந்தாவின் மடங்களை முற்றுகையிடவும், அவனது படங்களை நடுத்தெருவில் எரிக்கவும் வெறி கொண்டு நின்றனர். நேற்று வரை அவர்கள்தான் இந்த நித்யானந்தாக்களுக்கு ஆராதனை செய்துகொண்டு இருந்தவர்கள். இப்படிப்பட்ட போலிச்சாமியார்களுக்கு எதிரானவர்கள் என்பதை உடனடியாக காட்டிக் கொண்டால் மட்டுமே, தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதும், இனியும் தொடர்ந்து மற்ற சாமியார்களைக் காப்பாற்ற முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நலன் சார்ந்தே இந்தக் காரியங்களைச் செய்கிறார்கள்.

இதுவரை அவனைப்பற்றி ‘ஆஹோ ஓஹோவென்றும்’, ‘அப்படியாம், இப்படியாம்’ என்றும் பிம்பங்களை கட்டமைத்த, புத்திசாலிகள் என அறியப்பெற்றவர்கள் இப்போது என்ன செய்வதென்று அறியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கலாம். அறிவித்த ஆருடங்களும், பிரமைகளும் நாலுபேர் நடுவில் பொய்த்துப் போய் தங்கள் சிந்திக்கும் திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து அவமானப்படலாம். அவர்களும் தங்கள் நலன் சார்ந்தே இருப்பார்கள்.

பொதுவாக யோசிக்க வேண்டிய பல விஷயங்களை வெகுஜனப்பரப்பில் இருந்து விலக்கி விடுகிற இயல்புகளுக்கு நாமே ஆளாகிவிடுகிறோம். பரபரப்பிலும், அந்தரங்கங்கள் பொதிந்தச் செய்திகளிலும் அடிபட்டுப்போகிற ஒரு கேள்வியை மட்டுமே இந்த இடத்தில் கேட்கத் தோன்றுகிறது.

சென்ற வருடத்தின் இறுதிநாளில் நித்யானந்தா எழுதிய ‘முக்தி வாழ்வு’ என்னும் நூலை கர்நாடகாவின் முதன் மந்திரி எடியூரப்பா பயபக்தியோடு வெளியிடுகிறார். அவனது பிறந்தநாளோடு புத்தாண்டு துவங்கும் அடுத்த நாளில் ‘அவர் கல்பதரு தரிசனம் தருவார்’ என தினமணி நாளிதழ் செய்தி வாசிக்கிறது. “நாம் வாழும் காலத்திலேயே பரம்ஹம்ச நித்யானந்தா போன்றவர்கள் பெரும் ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று ஒருவர் பெருமிதம் கொள்கிறார். அவனது எழுத்துக்களைத் தொடராக படிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் ஒரு ஜனத்திரள் இருக்கிறது. அமெரிக்காவில், கொலம்பஸில் 2007ல் இந்த நித்யானந்தா கோவிலைக் கட்டி பிரண பிரதிஸ்டை செய்தது குறித்து இன்னொருவர் குறிப்பிடுகிறார். ஏராளமான கல்வி, மருத்துவச் சேவைகள் அவனது பெயரில் நடக்கின்றன. கோடி கோடியாய் சொத்துக்களோடு பல நிறுவனங்கள் அவன் பெயரில் இயங்குகின்றன. அவன் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், என எல்லாவற்றையும் தரிசனமயமாக பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் இலட்சக்கணக்கான மக்கள் அவன் முன்னால் கூடுகிறார்கள். இந்த சிவராத்திரி அன்று அவனது தரிசனத்தை யூடியுபில் பார்த்துவிட்டு, வந்திருக்கும் கமெண்ட்களைப் பார்த்தால் இன்னும் தெளிவாகும். 33 வயதில் அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து உட்கார வைத்தது யார் அல்லது எது?

அவனது தியானபீடம் சென்று அங்கு அவன் என்ன நிகழ்த்திக்கொண்டு இருக்கிறான் எனப் பாருங்கள். சன் டிவி வீடியோவில் கதனகுதூகலமாக பார்த்த ஆள் அங்கே ஒரு பெரிய ஆசனத்தில் எப்படி வீற்றிருக்கிறான் என பாருங்கள். அதற்குள் மேலும் சென்றால் கண்களை மூடி மெல்லத் திறந்து அருட்பெருஞ்ஜோதியாய் அந்த முகம் எப்படி சிரிக்கிறது என பாருங்கள். உண்மைகள் தெரிய வரலாம். அப்போதாவது கோபம் வருகிறதா என பாருங்கள்.

தயவுசெய்து அவனோடு இருக்கும் அந்த நடிகை யார் என்பதை மட்டும் ஆராய்ச்சி செய்து காணாமல் போகாதீர்கள்.


No comments:

Post a Comment